Monday, December 14, 2009

முல்லை, கிளிநொச்சி மாவட்டங்களில் இதுவரை 22,000 பேர் மீள்குடியமர்வு உறவினர்களுடன் வசிப்போர் 17, 18இல் மீள்குடியேற்றம்



முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் இதுவரையில் 22 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோரை மீளக்குடியமர்த்தும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் தங்கியிருப்போரை மீளக்குடியமர்த்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர்கள் தெரிவித்தனர்.

வவுனியாவில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் வசித்து வருபவர்கள் எதிர்வரும் 17 ஆம், 18 ஆம் திகதிகளில் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி மற்றும் பூநகரி செயலாளர் பிரிவுகளில் மீளக் குடியமர்த்தப்படவிருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் நேற்று தினகரனுக்குக்குத் தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்களை விடுத்து வவுனியாவின் வெளியிடங்களில் தங்கியிருப்பவர்கள் தமது மீள்குடியேற்றத்தை உறுதி செய்து கொள்வதற்காக வவுனியா - குருமண்காட்டில் அமைந்துள்ள கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மீள்குடியமர்வு க்கான விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து பதிவுகளை மேற்கொள்ளுமாறும் அரச அதிபர் கேட்டுக் கொண்டார்.

ஏற்கனவே, பதிவுகளை மேற்கொண்டோரே 17ம், 18ம் திகதிகளில் விசேட பஸ்கள் மூலம் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர். தமக்கு அறிவிக்கப்பட்டுள்ள திகதியன்று நகர சபை மைதானத்திற்கு காலை 8 மணிக்கு வருகை தருமாறும் இதன் போது பாரிய பொதிகளை தம்முடன் எடுத்து வரவேண்டாமென்றும் அரச அதிபர் மேலும் கேட்டுக் கொண்டார்.

கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் உருத்திரபுரம் கிழக்கு, ஜெயந்திநகர், பெரிய பரத்தன், உதய நகர் மேற்கு ஆகிய இடங்களிலும் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் முழங்காவில், இரணைதீவு, நாச்சிக்குடா, ஜெயபுரம் வடக்கு, ஜெயபுரம் தெற்கு, கிராஞ்சி, பல்லவராயன்கட்டு, பொன்னாவெளி, நல்லூர், கரியாலை நாகபடுவான் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்களே 17ம், 18ம் திகதிகளில் மீளக்குடியமர்த்தப்படவு ள்ளனர்.

நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுக ளில் தங்கிருக்கும் முல்லைதீவு துணுக்காய், மாந்தை கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்தவர் களும் மீளக்குடியமர்த்தப்படவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
MONDAY, DECEMBER 14, 2009 லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment