Monday, August 30, 2010

நிரூபமாராவ் இன்று வருகை:வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு நேரடி விஜயம்: இந்திய அபி. பணிகளையும் பார்வையிடுவார்


இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிரூபமாராவ் இன்று இலங்கை வருகிறார். இரு தரப்புச் சந்திப்புக்களை மேற்கொள்வதற்காக நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரும் இவர், இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திச் செயற்திட்டங்களை நேரில் சென்று பார்வையிடுவாரென வும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. வெளிவிவகாரச் செயலாளர் நிரூபமாராவ் உள்ளிட்ட குழுவினர் வடக்கில் வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை (31) வவுனியா சென்றடையும் நிரூபமா தலைமையிலான குழுவினர் அங்கே நிறுவப்பட்டிருக்கும் மெனிக்பாம் மற்றும் கதிர்காமர் நிவாரணக் கிராமங்களை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர், வவுனியா அரச அதிபர் அலுவலகத்தில் கலந்துரையாடலொன்றில் பங்குபற்றுவர்.
அதனைத் தொடர்ந்து அவர் நிலக்கண்ணிவெடியகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் இந்தியக் குழுவினர் செயலாற்றும் இடங்களை நேரில் சென்று பார்வையிடுவாரெனவும் வவுனியா அரசாங்க அதிபர் திருமதி. சார்ள்ஸ் கூறினார்.

இதனையடுத்து, நிரூபமாராவ் வடக்கில் ஏனைய மாவட்டங்களுக்கும் விஜயம் செய்து இந்திய அரசாங்கத்தின் நிதியுதவி யின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திச் செயற்பாடுகள் குறித்து ஆராய்வார். குறிப்பாக வடக்கில் இந்திய அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்படவிருக்கும் வீடுகள் குறித்து இதன்போது கூடுதல் கவனம் செலுத்தப்படுமெனவும் வெளி விவகார அமைச்சு தெரிவித்தது. இந்திய வெளிவிவகாரச் செயலாளருடன் மேலும் 12 அரசாங்கப் பிரதிநிதிகள் இலங்கை வருவரென எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதி நிதிகள், இலங்கைத் தொழிலாளர் காங் கிரஸின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய கட்சித் தலைவர்களை இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சந்தித்து உரையாடுவார்.

எதிர்வரும் 02 ஆம் திகதி அவர் நாடு திரும்புவதற்கு முன்னதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகாரச் செயலாளர் ஜி. எல். பீரிஸ் ஆகியோருடன் இருதரப்புச் சந்திப்புக்களை மேற்கொள் வார்ரெனவும் அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
MONDAY, AUGUST 30, 2010லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment