Monday, August 3, 2009

சவூதி அரேபியாவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அலுவலகம்:இலங்கையர் நலன் பேண நடவடிக்கை

சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் கீழ் செயற்படக் கூடியவகையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அதன் உப அலுவலகங்களை சவூதி அரேபியாவின் வெவ்வேறு பிரதேசங்களில் அமைப்பதற்குத் தீர்மானித்துள்ளது.

சவூதி அரேபியாவில் பணிபுரியும் இலங்கையரின் நலன் கருதி இந்த உப அலுவலகங்களைத் திறப்பதற்கு முடிவு செய்திருப்பதாக பணியகத்தின் பேச்சாளர் நேற்றுத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், சுமார் ஆறு இலட்சம் இலங்கையர்கள் சவூதி அரேபியாவில் பணிபுரிகின்றனர். இவர்கள் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக ரியாத்திலுள்ள தூதரகத்துக்கோ அல்லது கிளையான தமாமுக்கோ செல்ல வேண்டிய நிலைமையுள்ளது.
இதனால் சவூதி அரேபியாவில் பணிபுரியும் இலங்கையர்கள் பல அசெளகரியங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் சவூதி அரேபியாவில் இலங்கையர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் தூதரகத்தின் கீழ் செயற்படக் கூடியவகையில் உப அலுவலகங்களை மேலும் திறக்கவும்இ அங்கு பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் முன்னெடுப்பதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தலைமையிலான குழு சவூதி சென்றுள்ளது.

இதேவேளைஇ பல்வேறு குற்றச் செயல்களை புரிந்துள்ளதாக காரணம் காட்டி தமாம் மற்றும் ரியாத் ஆகிய இடங்களிலுள்ள தற்காலிக முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சுமார் 250 இலங்கையர்களை விடுவிப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் பணியகத்தின் தலைவர் முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். (03-08-2009-லக்ஷ்மி பரசுராமன்)

No comments:

Post a Comment