Friday, March 19, 2010

கடன் வழங்கிய எந்தவொரு நாடும் தவணைப் பணம் உரிய நேரத்தில்b வழங்கவில்லையென முறையிட்டதில்லை நிதியமைச்சின் செயலாளர் ஐயசுந்தர


இலங்கைக்கு கடன் வழங்கிய எந்தவொரு நாடோ அல்லது நிறுவனமோ தவணைப் பணத்தை உரிய நேரத்தில் செலுத்தவில்லை யென இதுவரை முறைப்பாடு செய்ததில்லை. இது எமது நாட்டிற்குரிய சிறப்பம்சமாகுமென நிதியமைச்சின் செயலாளர் டி.பி. ஜயசுந்தர தெரிவித்தார்.

நிதியமைச்சில் நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.

அரசாங்கம் பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புக்களிடமிருந்து சட்டத்துக்கு முரணான வகையில் பெருமளவு கடனை வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்த முடியாது திண்டாடுவதாக எதிர்க் கட்சித் தலைவர் ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கும் செய்தியை முழுமையாக மறுத்த பின்னரே செயலாளர் டி.பி. ஜயசுந்தர மேற்கண்ட கருத்தை முன்வைத்தார்.

எந்தவொரு நாடோ நிறுவனமோ சட்டத்துக்கு முரணான வகையில் கடனை வழங்கவும் முடியாது, அதனை நாம் பெற்றுக்கொள்ளவும் முடியாது.

எடுக்கப்பட்டிருக்கும் கடனுக்கான தவணைப் பணம் உரிய முறையில் செலுத்தப்பட்டு வருகின்றது. இதில் எந்தவொரு திண்டாட்டமும் கிடையாது. 1955 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் வருமானத்தை விட செலவீனம் அதிகரித்தே உள்ளது. நீண்டகால சுமார் 20 வருட அடிப்படையில் கடனை திருப்பிச் செலுத்தும் வகையிலேயே நாம் கடன் பெற்றுள்ளோம்.

இவை தவணை முறையில் செலுத்தப்படும்பேது எந்தத் திண்டாட்டமும் ஏற்பட சாத்திய மேயில்லை. இந்நிலையில், ஒரு வருடத் துக்கான வருமானத்துடன் நீண்டகாலத்துக்கு செலுத்த வேண்டிய தொகையை ஒப்பிட்டு அரசாங்கத்தை குறை கூறுவதில் அர்த்தமில்லை. அரசாங்கத்தின் கடனில் 80 சதவீதம் உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டவையாகும். அரசாங்க வங்கிகள் மற்றும் ஊழியர் சேம லாப நிதியம் என்பவற்றினூடாக பெறப்படும் நிதியினூடாகவே நாட்டில் பாரிய அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்காக உரிய நேரத்தில் மக்களுக்கு தேவைப்படும் நிதியை நாம் கொடுக்காமலில்லையெனவும் செயலாளர் ஜயசுந்தர தெரிவித்தார்.
நாம் பெற்றுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு கடனும் நாட்டின் அபிவிருத்திக்காகவே. உதாரணமாக அம்பாந்தோட்டை துறைமுகப் பணிகள் முழுமை பெற்றதும் அதற்காக செலவிட்ட தொகையிலும் மும்மடங்கை எம்மால் வருமானமாக பெற்றுக் கொள்ள முடியுமென்ற நம்பிக்கை எம்மிடம் உண்டு என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியம் நாட்டுக்கு வழங்கப்படவிருந்த மூன்றாம் தவணைக்குரிய பணம் தாமதித்ததிற்கான பிரதான காரணம் உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியேயாகும். தற்போது ஆறு பில்லியன் அமெரிக்க டொலர்கள் கையிருப்பில் இருப்பதனால் இந்தத் தாமதம் குறித்து தாம் கவலையடையத் தேவையில்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.
FRIDAY, MARCH 19, 2010லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment