Tuesday, October 6, 2009

பருவப்பெயர்ச்சி மழையின் பாதிப்பை நிவாரண கிராமங்களில் தவிர்க்க திட்டம்: வடிகாலமைப்பு, சுகாதார வேலைத் திட்டம் 80 வீதம் பூர்த்தி


வவுனியா நிவாரணக் கிராமங்களில் உள்ளவர்கள் பருவப் பெயர்ச்சி மழையால் பாதிக்கப்படாவண்ணம் முன்னெடுக்கப்பட்டு வரும் சுகாதார மற்றும் உட்கட்டமைப்பு வேலைத் திட்டங்கள் 80 சதவீதம் பூர்த்தியடைந்திருப்பதாக இடர் முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்கள் அமைக்கப்பட்டிருக்கும் வவுனியாவில் அனைத்து வலயங்களிலும் பாதுகாப்பான முறையில் வடிகாலமைக்கும் வேலைத் திட்டங்கள் துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் எதிர்வரும் 10 நாட்களுக்குள் இத்திட்டத்தின் பணிகள் முழுமையாக பூரணப்படுத்தப்படுமெனவும் அமைச்சர் மேலும் கூறினார்.

வன்னியில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கைகளின்போது இடம்பெயர்ந்து வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தோரில், மீளக்குடியமர்த்தப்பட்டோர் மற்றும் உறவினர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டோர் தவிர்ந்த தற்போது தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருக்கும் 2 இலட்சத்து 88 ஆயிரத்து 679 பேரினதும் சுகாதாரத்தைக் கருத்திற்கொண்டு அரசாங்கம் இச் செயற்திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும் அமைச்சர் சமரசிங்க சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இம்மாதம் இறுதி முதல் எதிர்வரும் டிசம்பர் வரையான காலப் பகுதியில் வவுனியாவில் பருவப் பெயர்ச்சி மழை எதிர்பார்க்கப்படுவது வழமை.

இம்மழைக்கு முகம் கொடுக்க கூடிய வகையில் வேலைத் திட்டங்கள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இலங்கை அரசாங்கத்தின் இந்த வேலைத் திட்டங்கள் ஐ.நா. அமைப்புக்களின் அனுசரணையுடன் நடைபெற்று வருகின்றன.

வட மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் மீள்குடியேற்றம் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் இதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.

மழைகாலத்தின்போது நிவாரணக் கிராமங்களில் உள்ளவர்கள் பாரிய அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. அவ்வாறானதொரு சூழ்நிலையை தவிர்க்கும் முகமாகவே அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.

மழையினால் ஏற்படக் கூடிய அசாதாரண சூழ்நிலைகளை தவிர்க்கும் முகமாக அநேகமான வேலைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

வவுனியா வலையம் 01 இல் 95 சதவீதமான வேலைத் திட்டம் பூர்த்தியாகியிருப்பதாகவும் வலையம் 02 இல் 100 சதவீதமும் வலையம் 03 இல் 80 சதவீதமும் வலையம் 04 இல் 80 சதவீதமும் வலையம் 05 இல் 90 சதவீதமும் வலையம் 06 ‘எ’ யில் 40 சதவீதமும் வலையம் 06 ‘பி’ யில் 50 சதவீதமும், வலையம் 08 இல் சுமார் 70 சதவீதமான வேலையும் பூர்த்தியடைந்திருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். வலையம் ‘0’ மற்றும் வலையில் 07 இல் வேலைகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
TUESDAY, OCTOBER 06, 2009 லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment