Monday, September 7, 2009

தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு: இன்று கொழும்பில் இறுதிக் கட்டப் பேச்சு



தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை 500 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பான இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தை இன்று கொழும்பில் நடத்தப்படுமென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம் தெரிவித்தார்.

முதலாளிமார் சம்மேளனத்துக்கும் தோட்டத் தொழிற்சங்கங்களின் கூட்டுக் கமிட்டிக்குமிடையிலான இச்சந்திப்பு இன்று மாலை 5 மணிக்கு சம்மேளன அலுவலகத்தில் நடைபெறும்.

தோட்டத் தொழிற்சங்கங்களின் கூட்டு கமிட்டி சார்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம், மற்றும் தோட்ட தொழிற்சங்க கூட்டு கமிட்டி ஆகியன 22 தனியார் கம்பனிகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய முதலாளிமார் சம்மேளனத்துடன் நாள் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பாக இன்று பேச்சு நடத்தும்.

இதேவேளை, தோட்டத் தொழிற்சங்கங்களின் கூட்டு கமிட்டிக்கும் முதலாளிமார் சம்மேளத்துக்குமிடையே பல தடவைகள் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடையவே, தோட்டத் தொழிலாளர்களில் ஒத்துழையாமை தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டம் வெற்றிகரமாக தொடரப்பட்டு வரும் நிலையில் இன்றைய பேச்சுவார்த்தையும் தொழிலாளர்களுக்கு சாதகமாக அமையாவிடின் கடுமையான முறையில் இப்போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் கூறினார்.
MONDAY, SEPTEMBER 07, 2009 MONDAY, லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment